கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்...

Kaṇmaṇi kuṇacēkaraṉiṉ “neṭuñcālai” cēṟṟil putainta pēruntai iḻukka utavum iḻuvaik kayiṟāy

Authors

  • முனைவர் இரா.இராஜா | Dr. R. Raja உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 17, 9865767721

Keywords:

கண்மணி குணசேகரனின், நெடுஞ்சாலை, சேற்றில், புதைந்த, பேருந்தை, இழுவைக் கயிறாய், இழுவை, கயிறாய்

Abstract

மனித வாழ்க்கையில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. வரலாற்றுக் காலந்தொட்டு மனிதர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகி வருகின்றனர். கடல்வழி, வான்வழிப் பயணங்களை விடத் தரைவழிப் பயணங்கள் தொன்மையானவை. தொடக்க காலங்களில் பொதுமக்கள் யாவருக்குமான பொதுப்போக்குவரத்து ஊர்திகள் இருந்ததாகத் தெரியவில்லை. அதற்கான ஒரு தேவையும் அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னர், பயணங்கள் பெருக்கமடைந்தன. குறிப்பாக, ஐரோப்பியர்களின் கடல்பயணங்கள், உலகின் பல பகுதிகளில் காலனியாதிக்கத்தை நிலைநாட்டக் காரணமாக விளங்கின. இந்தியாவிற்குக் கடல்வழியாக வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் வணிக நலன்களுக்காகத் தரைவழிப் பயணத்தில் பல புதுமைகளைக் கொண்டுவந்தனர். அதனால், இரயில், கார், பஸ் போன்றவை இங்குள்ள மக்களுக்கு அறிமுகமாயின. இந்திய விடுதலைக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் மேற்சொன்ன வாகனங்கள் எதிலும் பயணம் செய்யாத குடிமக்கள் இருப்பது அரிதினும் அரிது. அந்த அளவிற்குத் தரைவழிப்பயணம் எல்லோர் வாழ்விலும் இரண்டறக் கலந்துள்ளது.

தமிழில் பயண இலக்கியங்கள் பல உண்டு. ஆனால், பயணத்தை நிகழ்த்துவதற்குக் காரணமான பொதுப்போக்குவரத்து  நிறுவனங்கள் / அதன் அங்கங்கள் குறித்த நுட்பமான பதிவுகள் மிகவும் குறைவு. அதுவும் பேருந்து போக்குவரத்துக் குறித்துத் தனிச்சிறப்பான படைப்புகள் ஏதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளனவா எனத் தெரியவில்லை. அவ்வகையில் 2009 டிசம்பரில் வெளிவந்த கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ நாவல் தனித்துவம் மிக்க ஒரு படைப்பு.

இன்றைய சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளுள் கண்மணி குணசேகரனும் ஒருவர். அவர் எளிமையான மொழியில் செறிவான கதைகளை எழுதுவதில் வல்லவர். அவரின் முதல் நாவலான அஞ்சலையே தமிழ் அறிவுலகினரை அவர்பக்கம் திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. அதுவரை தமிழ் எழுத்தாளர்கள் / படைப்பாளர்கள் பெரிதும் கவனிக்காமல் விட்டிருந்த தமிழகப் பகுதிகளில் ஒன்றான விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடிவட்டார மக்களின் வாழ்வியலைக் கண்மணி, துல்லியமாகவும், நேர்த்தியாகவும் வெளியுலகிற்குப் படைத்துக் காட்டினார். அதற்கு மேலாக அவரின் மொழிநடையும், யதார்த்தமுறையிலான கதைப்பின்னலும் பல தரப்பினரையும் கவர்ந்திழுத்துக் கொண்டன. அவரின் படைப்பாளுமை குறித்த பல தகவல்கள், ஏடுகளிலும் தளங்களிலும் வலம் வந்தன; இன்றும் வருகின்றன. இங்குப் பேசப்படும்  நெடுஞ்சாலை நாவல் பற்றிய அறிமுகம், விமர்சனங்களைத் தாங்கிப்  பத்திற்கும் மேற்பட்ட வலைப்பூப்பதிவுகள் காணப்படுகின்றன (பார்க்க : துணையன் பகுதி).

References

Published

10.02.2016

How to Cite

R. Raja, D. R. R. (2016). கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்.: Kaṇmaṇi kuṇacēkaraṉiṉ “neṭuñcālai” cēṟṟil putainta pēruntai iḻukka utavum iḻuvaik kayiṟāy. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(4), 62–72. Retrieved from https://inamtamil.com/journal/article/view/141