மெய்ப்பாடு என்ற தமிழ் இலக்கியக் கோட்பாடு அதன் விளக்கங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்டு ஆயும்போது ஓர் உலக இலக்கியப் பொதுமைக்கோட்பாடாகக் காட்சியளிக்கிறது.
இலக்கியம் வாய்மொழியாக இருந்தபோது ஆடலுடன் கூடிய பாடலாக இருந்தது. கூத்துக்களில் இருந்த முக உடலசைவுகள், சைகை ஆகியன உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டின. இலக்கியத்தில் சொற்களை வைத்துத்தான் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு தோன்றிய மெய்ப்பாட்டுச் சொற்களின் விளக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்தே பெறப்படுவதை அறியலாம். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகள் மெய்ப்பாட்டியலின் முதல் 12 நூற்பாக்களால் கூறப்படுகின்றன.